கோவை. ஜூன். 9- கோவை ஊரடங்கு காலத்தில், மகளிர் குழுவினர் வாங்கிய கடனை திரும்ப செலுத்தும்படி, நிர்பந்தம் செய்யக்கூடாது’ என்று, தனியார் வங்கிகள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கு, கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கோவை கலெக்டர் நாகராஜன் கூறியுள்ளதாவது:தனியார் வங்கிகள், மைக்ரோ பைனான்ஸ் கடன் வழங்கும் நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கிய, கடன் தவணை தொகையை கேட்டு, நிர்பந்தம் செய்து வருவதாக புகார்கள் வருகின்றன.தொற்று பரவி வரும் சூழலில், மகளிர் குழுவினர், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இக்கட்டான நிலையில் உள்ளனர். இத்தகைய சூழலில், கடனுக்கான தவணை தொகையை வசூலிக்க நிர்பந்தம் செய்வதை தவிர்த்து, கால அவகாசம் வழங்க வேண்டும். கூடுதல் வட்டி வசூலிப்பதையும் தவிர்க்க வேண்டும்.இது தொடர்பாக, மாவட்ட அளவில் திட்ட இயக்குனர், முன்னோடி வங்கி மேலாளர், மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.மகளிர் குழுவினரின் கடன் திரும்ப செலுத்தும், கால அட்டவணையை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் வங்கிகள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவன பணியாளர்கள், வெவ்வேறு இடங்களுக்கு சென்று வருவதால், அவர்கள் மூலம் தொற்று பரவவும் வாய்ப்புள்ளது. எனவே, இது தொடர்பான புகார்களுக்கு இடம் அளிக்காத வகையில் செயல்பட வேண்டும்.மீறி ஏதேனும் புகார்கள் எழும் பட்சத்தில், ஊரடங்கை மீறிய செயலாக கருதப்பட்டு, தொடர்புடைய அனைத்து தனியார் வங்கிகள், மைக்ரோ பைனான்ஸ் கடன் நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Share to your friends.