இன்றைய சிந்தனை
…………………………………..
‘’நாளைய கவலை இன்று வேண்டாம்”
…………………………………..
நேற்று என்பது வரலாறு…!
நாளை என்பது புதிர்…!!
இன்று மட்டும்தான் கண்கூடான உண்மை….!

அது மட்டுமே நமக்குக் கிடைத்த வாய்ப்பு…!

நேற்றைய இன்னல்கள், சுமைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இன்று என்று சொல்கின்ற இந்த அழகான நாளோடு அருமையாக வாழ்ந்து விட்டுப் போகவேண்டும்…

நேற்று நிகழ்ந்ததைப் பற்றி நினைத்து வருந்துவதாலும் அல்லது பெருமை கொள்வதாலும் எந்தப் பலனும் பெறப்போவதில்லை…

கிடைத்த இன்றைய நாட்களை நமதாக்கிக் கொள்ளவேண்டும், வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வினையும் துய்த்தல் வேண்டும்.. *(துய்த்தல்-அனுபவித்தல்)

நாளையைப் பற்றி நம்மால் கணிக்கக் கூட இயலாது, இன்று இருக்கும் நாம், நாளை இருப்போமா…? என்று தெரியாது, அதனால் மற்றவர்களிடம் வெறுப்பு கொள்ளாமல் அன்பு செலுத்த வேண்டும்…

நேற்று நடந்ததை நினைத்தும், நாளை எதிர்நோக்கும் சூழ்நிலைகளையும் நினைத்தும் வருந்தாமல், இன்றைய நாட்களினை ஆனந்தமாகத் துய்த்தல் வேண்டும்..

இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்த உலகம் எப்படி…! அன்று யாராவது ஆலோசித்துப் பார்த்திருப்பார்களா…? இன்று இப்படியொரு தீநுண்மியால் வீட்டிலேயே நாமெல்லாம் முடங்கிப் போவோம் என்று…!! (தீநுண்மி-வைரஸ்)

இதுவும் ஒரு நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ளவேண்டும், இன்று அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடந்தாலும் ,தனித்திருந்தாலும் உணர்வால் இணைந்திருக்கிறோம்…

இன்றைய நிலையில் குடும்பத்தோடு நேரம் செலவிட முடிகிறது. கால்களில் சிறகுகளைக் கட்டியதுபோல் அலுவலகத்தை நோக்கி சிறகடித்த நாட்கள் உண்டு, அப்படியெல்லாம் இல்லாமல் இன்று நினைத்த நேரத்தில் எழுகிறோம். இதுவே நமக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு அல்லவா…!

ஆம் நண்பர்களே…!

கடந்துபோன துன்பங்களையும், நாளை வரவிருக்கும் சிக்கல்களையும் பற்றி நினையாமல், இன்றைய நாளில் மட்டும் மூழ்கி உணர்ந்து, ஒவ்வொரு மணித்துளிகளையும் மகிழ்வுடன் களிப்போம்…!

நேற்றைய துன்பங்களைக் கடவோம்…!
நாளைய எதிர்பார்ப்புகளைக் களைவோம்…!!
இன்றைய நாட்களை விளையாண்டு இயன்றவரை அழகுறச் செய்வோம்…!

Share to your friends.