கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அசம்பாணி என்ற பகுதியை சேர்ந்தவர் பொடியன் (80). இவரது மனைவி அம்மிணி (78). வயது முதிர்ந்த இருவரும் தனது இரண்டு மகன்களில் இளைய மகனான ரெஜி என்பவருடன் வசித்து வந்துள்ளனர்.
தனது பெற்றோரை ஒரு இருட்டு அறையில் பூட்டிய ரெஜி, அருகில் உள்ள அறையில் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

இருட்டு அறையில் இருக்கும் பெற்றோருக்கு உணவு, தண்ணீர், மருந்து என எதையும் கொடுக்காமல் பூட்டியே வைத்துள்ளார். மேலும் உறவினர்கள் யாரும் வீட்டிற்குள் வரக்கூடாது என வீட்டின் வாசலில் நாயையும் கட்டி வைத்துள்ளார்.

வயது முதிர்ந்தவர்கள் கணக்கெடுப்பிற்காக வந்த அங்கன்வாடி பணியாளர்கள், பெற்றோரை வீட்டிற்குள் வைத்து பூட்டியிருந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்க, போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு பொடியன் ஏற்கனவே இறந்து கிடந்துள்ளார். தாய் அம்மிணி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவலர்கள் அம்மிணியை மருத்துவமனையில் சேர்த்து விட்டு பொடியனின் உடலை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த அறிக்கையில் பொடியனின் சிறுகுடல், பெருங்குடல் போன்றவற்றில் துளியளவு கூட உணவு இல்லை எனவும், குடல்கள் சுருங்கியிருந்ததோடு, தொண்டையும் உலர்ந்திருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவர் பட்டினியால் இறந்துள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து மகன் ரெஜி, அவரது மனைவி ஜான்சி ஆகியோரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share to your friends.